மாணவியின் தந்தை கடன் விவகாரம் - வங்கி ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், பாரத ஸ்டேட் வங்கியின் வேதாரண்யம் கிளையில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார்.
இவரது தந்தை கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாததால் இவருக்கு கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கி மேலாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபிகா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடனை கொடுத்து விட்டு, கடனாளி பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதை விட, கடனை கொடுக்க மறுப்பது சரியே என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்தார். அதில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர் என்று தந்தை மீது பழி சுமத்தியதற்காக வங்கி நிர்வாகம் ரூ.10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தீபிகாவின் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அவரது தந்தை வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #Highcourt