செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே மணப்பெண்ணை படம் பிடித்ததை தட்டிக்கேட்ட உறவினர் அடித்துக்கொலை

Published On 2018-09-13 10:03 GMT   |   Update On 2018-09-13 10:03 GMT
மணப்பெண்ணை செல்போனில் படம் பிடித்ததை தட்டிக் கேட்ட உறவினர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 38).

நேற்று இவரது சகோதரி மகள் ஈஸ்வரிக்கும், கல்விமடையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் பிள்ளையார் குளத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து நேற்று இரவு மணமக்கள் முருகவேல் வீட்டுக்கு வந்தனர். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (24), செந்தில்குமார் (24), கோபி (21), முத்து (18) ஆகியோர் தங்களது செல்போனில் மணப்பெண்ணை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த முருகவேல் பெண்ணை படம் பிடிக்க வேண்டாம் என 4 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கட்டையால் முருகவேலை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த முருகவேல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், கோபி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

முருகவேல் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் திருமண வீடுகளை இழந்து சோகமாக காணப்பட்டது.

Tags:    

Similar News