புயல் பாதித்த பகுதிகளில் பணிகள் மந்தம்- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் தென்னை, மா, தேக்கு போன்ற மரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. தென்னையை நம்பியுள்ள விவசாய குடும்பங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் வீதமாவது கணக்கிட்டு நிவாரணம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் உணவு சரியாக போய் சேரவில்லை. அதேபோல் கடற்கரையில் உள்ள மீனவ படகுகள் குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான மதிப்புடையது. எனவே சேதமடைந்த படகுகளுக்கான கடன் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய, கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைது செய்வது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ பார்வையிட வராதது வருத்தமளிக்கிறது என்றார். #thirunavukkarasar #gajacyclone