செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

திருச்சி அண்ணா பல்கலை மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-01-09 07:39 GMT   |   Update On 2020-01-09 07:39 GMT
திருச்சி அண்ணா பல்கலை மாணவி விடுதியில் காதலனுடனான பிரச்சனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர்:

தர்மபுரியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகள் லோகேஸ்வரி ( வயது20). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். அவருடன் தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த இருவரது பெற்றோரும் காதலை ஏற்றுக்கொண்டதுடன், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் செய்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தனது தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன் இருந்ததால் லோகேஸ்வரி மிகவும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் கல்வி உதவித்தொகை பெற்று படிப்பை தொடர முடிவு செய்த அவர், சம்பவத்தன்று தனது காதலனிடம் கல்வி உதவித்தொகை விண்ணப்ப மனு அளிப்பதற்காக கல்லூரி அலுவலகத்திற்கு வருமாறு காதலனை அழைத்துள்ளார். ஆனால் அவரது காதலன் செல்ல மறுத்துள்ளார்.

ஏற்கனவே தந்தையின் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரி, தனது காதலன் தன்னுடன் வர மறுத்ததால் மேலும் மனமுடைந்தார். இந்தநிலையில் நேற்றிரவு தான் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு சென்ற லோகேஸ்வரி அங்குள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலனுடனான தகராறில் லோகேஸ்வரி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News