மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,581 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 411 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நேற்று இது மேலும் அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரத்து 256 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து 4 ஆயிரத்து 581 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 71.97 அடியாக இருந்தது. இன்று இது 71.87 அடியாக சரிந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு பின்பு மீண்டும் உயர சாத்தியக்கூறுகள் உள்ளன.