தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
- நடப்பாண்டில் தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
- பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ந்தேதி, ஆகஸ்டு 10-ந்தேதி ஆகிய நாட்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த இரு நாள்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு 'அல்பெண் 'டசோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டில் தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு சார், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 2.60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு அவற்றை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாத பட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்தசோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.