தமிழ்நாடு (Tamil Nadu)

கோகினூர் வைரம் பதித்த கிரீடத்துடன் ராணி எலிசபெத்

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுக்குமா பிரிட்டன்? வலுக்கும் கோரிக்கை

Published On 2022-09-09 14:40 GMT   |   Update On 2022-09-09 14:40 GMT
  • பிரிட்டிஷ் படையெடுப்பின்போது கிழக்கிந்திய கம்பெனியால் வைரம் திருடப்பட்டு பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது.
  • ராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் புதிய ராணியான கமிலா வசம் செல்லும்.

சென்னை:

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைந்துள்ள நிலையில், அவரது கிரீடத்தை அலங்கரித்த இந்தியாவின் கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பித்தர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.

உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம் இந்தியாவில் வெட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு சென்றது. இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. அவர் கோகினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.

பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் இந்த வைரத்தை திரும்ப பெற முடியவில்லை. தற்போது பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தும் காலமான நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் அரச வழக்கப்படி புதிய ராணியான கமிலா வசம் செல்லும்.

இந்நிலையில் கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடத்தை எலிசபெத்தின் மறைவுக்கு பிறகாவது இந்தியாவிற்கு திருப்பித் தர வேண்டும் என டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வைரத்தை இப்போது எளிதாக திரும்பப் பெறுவது எப்படி? என்பது குறித்து சிலர் மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News