தமிழ்நாடு

நடுரோட்டில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன

Published On 2024-06-23 09:52 GMT   |   Update On 2024-06-23 10:26 GMT
  • கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
  • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.

தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News