தமிழ்நாடு

ஆகஸ்ட் 6ம் தேதி கோவை மேயர் தேர்தல்- மாவட்ட நிர்வாகம்

Published On 2024-07-25 16:29 GMT   |   Update On 2024-07-25 16:29 GMT
  • தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
  • மேயர் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் செயல்படுவார்.

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கோவை மேயரை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான கூட்டமும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேயர் தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் செயல்படுவார் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News