பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது இது வெளிச்சத்துக்கு வந்தது
- தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
செங்குன்றம் அருகே உள்ள பம்மது குளம் பகுதியில் அரசினர் உதவி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் இந்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் குறைந்ததை மறைத்து 566 மாணவர்கள் பள்ளியில் படித்து வருவதாக கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பள்ளியில் வெறும் 219 மாணவர்களே படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது இது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை லதா மற்றும் இதனை கண்காணிக்காத வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மேரி ஜோசப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, பணியாற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், மாணவர்களின் எண்ணிக்கை விபரங்களை சரிபார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.