தமிழ்நாடு

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தினர் வசூலித்த போது ரூ.35½ லட்சத்துடன் காரில் தப்பிய டிரைவர் கைது

Published On 2023-06-07 09:17 GMT   |   Update On 2023-06-07 09:17 GMT
  • காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அம்பத்தூர்:

அண்ணாநகரில் பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சேத்துப்பட்டை சேர்ந்த பரத் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணத்தை வசூல் செய்தனர். அப்போது வசூல் செய்த பணத்தை காரில் வைத்து இருந்தனர். காரில் டிரைவராக கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் இருந்தார்.

அம்பத்தூரில் உள்ள ஒருநிறுவனத்தில் ஊழியர்கள் வசூல் செய்ய சென்றபோது பணம் இருந்த காரை திடீரென டிரைவர் அமீர் பாஷா ஓட்டி தப்பி சென்று விட்டார். அந்த காரில் ரூ.35½ லட்சம் ரொக்கம் இருந்தது. இதனால் வசூலில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த காரில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதனை வைத்து பார்த்த போது பணத்துடன் கார், மாதவரம் நோக்கி செல்வது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து சென்று மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரூ.35½ லட்சத்தையும் மீட்டனர்.

இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர் பரத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் பணத்துடன் தப்ப முயன்ற டிரைவர் அமீர்பாஷாவை கைது செய்தனர். காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அவர் உடனடியாக சிக்கிக்கொண்டார். அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News