தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராயத்தால் கண்ணீரில் கள்ளக்குறிச்சி - தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்விக்கு சாட்சி!

Published On 2024-06-20 08:13 GMT   |   Update On 2024-06-20 08:13 GMT
  • பலர் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி.
  • உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் கள்ளச்சாராய சந்தைக்கு மவுசு குறையவில்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரத்தை சேர்ந்தவர்களில் சிலர் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த மேலும் பலர் உடல்நல பாதிப்பு காரணமாக அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 


ஒருபுறம் நோயாளிகள் அனுமதியும், மறுபுறம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகமாகும் சம்பவங்கள் இன்னும் முற்றுபெறவில்லை. இதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கள்ளச்சாராய சம்பவம் பூதாகாரமாகி உள்ள நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவனைகளில் இருந்து மருத்துவர்கள் அடங்கிய குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

உறவினர்களை கள்ளச்சாராயத்துக்கு பறிகொடுத்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், கள்ளச்சாராய விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூட நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை என்று கண்ணீர்மல்க குற்றம்சாட்டினர்.

கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை குறித்த புகார்கள் எழுந்தன. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்படுகிறது.

வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கரும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது இதே பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அந்த வீடியோவில், "தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளசாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன். இவரது தொகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் 50 வீடுகளை சேர்ந்த கிராமங்கள் உள்ளன. அங்கு சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆதரவு தருபவர் உதயசூரியன். கல்வராயன் மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். இவர்கள் ஆதரவோடு, காவல்துறை ஆதரவுடன் இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த கள்ளச்சாராய சாவுக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று தான் கூறுவேன்," என்று தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. இவை தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News