தமிழ்நாடு

தமிழகத்தில் பருவமழை கைகொடுத்தது- அணைகளில் 78 சதவீதம் நீர் இருப்பு

Published On 2024-08-05 02:06 GMT   |   Update On 2024-08-05 02:06 GMT
  • அமராவதி அணையில் கடந்த ஆண்டு 1.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது.
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 4 சதவீதம் அதிகம் மழை கிடைத்தது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள முக்கியமான அணை மற்றும் நீர்த்தேக்கங்கள் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். தற்போது மழையால் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்து இருப்பதால் நேற்றைய நிலவரப்படி 174.579 டி.எம்.சி. இருப்பு இருக்கிறது. அதாவது 78 சதவீதம் நீர் உள்ளது. குடிநீர், பாசன தேவைக்கு இந்த நீர் போதுமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் இதே காலக்கட்டத்தில் (2023-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி) வெறும் 82.707 டி.எம்.சி. அதாவது 36.87 சதவீதம்தான் நீர் இருந்தது. இதனை ஒப்பிடுகையில் நடப்பாண்டு 2 மடங்கு நீர் இருப்பு அதிகம் உள்ளது.

குறிப்பாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 24.76 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 93.47 டி.எம்.சி. இருப்பு உள்ளது. அதேபோல், பவானிசாகர் அணையில் கடந்த ஆண்டு 17.72 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 24.77 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பைவிட அதிகமாகும்.

அமராவதி அணையில் கடந்த ஆண்டு 1.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.93 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். முல்லைப்பெரியாறு அணையில் கடந்த ஆண்டு 2.91 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 5 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். வைகை அணையில் கடந்த ஆண்டு 1.82 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2.96 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

 

பாபநாசம் அணை

பாபநாசம் அணையில் தற்போது 4.13 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும்.

மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு 435 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.57 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும். பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு 1.88 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.76 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும்.

பெருஞ்சாணி அணையில் கடந்த ஆண்டு 188 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2.42 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். கிருஷ்ணகிரி அணையில் கடந்த ஆண்டு 1.47 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.45 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

இது கடந்த ஆண்டை விட சற்று குறைவாக உள்ளது. சாத்தனூர் அணையில் கடந்த ஆண்டு 5.30 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.59 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு குறைவாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததும் ஒரு காரணமாகும்.

சோலையாறு அணையில் கடந்த ஆண்டு 3.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 5.12 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். பரம்பிக்குளம் அணையில் கடந்த ஆண்டு 5.67 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 12.42 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். ஆழியாறு அணையில் கடந்த ஆண்டு 635 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.78 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

இது கடந்த ஆண்டை விட சுமார் 5 மடங்கு அதிகமாகும். திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 376 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 595 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். மொத்தத்தில் முக்கிய அணைகளில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கான போதுமான நீர் இருப்பு உள்ளது என்று நீர் வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதேபோல் சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பருவகால மழை மற்றும் தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் நீர் இந்த ஏரிகளுக்கு வருகிறது.

இதில் தற்போது பூண்டி ஏரியில் நீர்த்திறப்பு பகுதிகளில் உள்ள கதவணைகள் பழுதானதால் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணியால் எதிர்பார்த்த அளவு நீர் பூண்டி ஏரியில் நிரப்ப முடியவில்லை.

பருவமழை மூலம் பெறப்படும் நீர் ஏரிகளுக்கு கொண்டுவரப்பட்டு வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

 

மழை காரணமாக பூண்டி ஏரிக்கு 160 கனஅடி, புழல் 95 கன அடி மற்றும் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரத்து 46 கனஅடி நீர் வந்துள்ளது. 1.4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 838.45 மில்லியன் கன அடி இருப்பு அதாவது 57.23 சதவீதம் இருப்பு உள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவைக்காக 1,424 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதேபோல் பூண்டி ஏரியில் இருந்து 127 கன அடியும், சோழவரத்தில் இருந்து 12, புழல் 224, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 15, செம்பரம்பாக்கம் 137 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிகளில் இருக்கும் 5.2 டி.எம்.சி. நீர் மூலம் 5 மாதத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 4 சதவீதம் அதிகம் மழை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோடை மழையும் பெரிய அளவில் கைக்கொடுத்தது.

அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் 31-ம் தேதி வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் பதிவாகக்கூடிய 12 சென்டி மீட்டர் மழையைவிட 18 சதவீதமாக அதாவது, 15 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது.

இதனைத்தொடர்ந்து தென்மேற்கு பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், வெப்பசலனம், மேற்கு திசை காற்று வேகமாறுபாடு, வளிமண்டல கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யக்கூடும். அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 49 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே மழை கொட்டியுள்ளது.

Tags:    

Similar News