தமிழ்நாடு

வேளாங்கண்ணி மாதா கோயிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-12-24 19:25 GMT   |   Update On 2022-12-24 20:23 GMT
  • அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில் முதல் ராட்சத குடில் வரை அமைக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் வாசித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, நாகை, கோவை போன்ற நகரங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தேவாலங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி அவர்கள் மகிழ்ந்தனர். 

Tags:    

Similar News