மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்- பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி
- மாணவியின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மாமல்லபுரம் போலீசார், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி கஜ சுபமித்ரா, பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்த மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 மாணவி உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த தற்கொலை முயற்சிகள், பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.