தமிழ்நாடு (Tamil Nadu)

ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றாததால் சட்டசபை கூட்டத்தை அ.தி.மு.க. மீண்டும் புறக்கணிப்பு?

Published On 2023-01-09 05:59 GMT   |   Update On 2023-01-09 05:59 GMT
  • எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கவர்னர் உரையை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரையும் புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு செய்து உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தும் அ.தி.மு.க.வினர் இது தொடர்பாக மனு அளித்தனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்படாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனால் கடந்த சட்டமன்ற தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் கவர்னர் உரையை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரையும் புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக இன்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில்  அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பது தொடர்பாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Tags:    

Similar News