தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரின் காவல் 2-வது முறையாக நீட்டிப்பு

Published On 2024-07-05 08:05 GMT   |   Update On 2024-07-05 08:05 GMT
  • இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 23-ந்தேதி அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக்குக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ரெஸ்மன், ஜஸ்டின், கெரின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். படகில் இருந்த சகாயம் (61), சந்தியா கிரிம்ஷன் (24), ஜெகன் (29), கருப்பையா (47), சுரேஷ் பாபு (40), காளிதாஸ் (30), ரூபின் (38), கண்ணன் (30), நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), புரூஸ்லீன், காளீஸ்வரன், ராஜ், முருகானந்தம், முத்துக்குமார், சீமோன் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.

இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ராமேசுவரம் மீனவர்களின் காவலை வருகிற 18-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக இலங்கை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News