தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. 53-வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நெல்லை வருகை

Published On 2024-10-20 05:08 GMT   |   Update On 2024-10-20 05:08 GMT
  • பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
  • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

நெல்லை:

அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிர்வாகிகளும், தொண்டர் களும் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அம்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு இரவில் புறப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நயினார் வீரபெருமாள் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து வரும்போது பாளை கே.டி.சி.நகரில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாகி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

மாநகரில் திருமண விழாவிற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மேலப்பாளையம் கருங்குளத்தில் தொடங்கி சிக்னல் வழியாக வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கொக்கிரகுளம், ஸ்ரீபுரம் வரையிலும் கொடி தோரணங்களும், பிரமாண்ட வரவேற்பு பதாகைகளும் மாநகர் மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புறநகரில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தருவையில் தொடங்கி அம்பை வரையிலும் பிரமாண்ட கட் அவுட்டுகள், வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News