தமிழ்நாடு (Tamil Nadu)

விவசாயிகளுக்கு உடனே நிவாரண உதவி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2023-02-04 07:27 GMT   |   Update On 2023-02-04 07:27 GMT
  • நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
  • மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்களும், ஊடு பயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. மேலும், அறுவடை செய்து, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

மழை நீரில் அழுகிய, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களை கணக்கெடுக்க உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், வேளாண் பெருமக்களுடன், கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்ல இயலாத நிலையில், வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். மேலும், உப்பளங்களில் நீர் புகுந்து உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News