அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி ஈ.பி.எஸ் முறையீடு
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார்.
- முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார்.
அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.