தமிழ்நாடு (Tamil Nadu)

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

Published On 2024-06-14 06:13 GMT   |   Update On 2024-06-14 06:13 GMT
  • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து 57 அடியை எட்டியது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 607 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.58 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.63 அடியாக உள்ளது.

இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Tags:    

Similar News