தமிழ்நாடு

பாம்பனில் நேற்று கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை படத்தில் காணலாம்.


தமிழக மீனவர்கள் கைது... வருகிற 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்

Published On 2024-07-02 02:01 GMT   |   Update On 2024-07-02 02:01 GMT
  • பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

கடந்த வாரம் ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News