பட்டாசு ஆலை வெடி விபத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
- வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பதுவார்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் வெடிவிபத்தால் பலநூறு அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை காக்கும் நோக்கில் குறைவான ஊதியத்தில் தங்கள் உயிரையே பணையம் வைத்து பட்டாசு தயார் செய்யும் ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்ற வெடி விபத்துகள் மீண்டும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.