தமிழ்நாடு (Tamil Nadu)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2024-08-04 05:33 GMT   |   Update On 2024-08-04 05:33 GMT
  • ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
  • காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 84 அடி நீர் இருப்பு 80.60 அடி நீர் இருப்பு உள்ளது அணைக்கு வரும் நீர்வரத்து 32 ஆயிரத்து 559 கனஅடி நீரானது அணைக்கு வருகிறது. அணையில் இருந்து நேற்று 33 ஆயிரத்து 771 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையானது 124.80 அடி கொள்ளளவு கொண்டது அணையின் நீர்மட்டம் 122.24 அடி அளவில் தண்ணீர் உள்ளது.

அணைக்கு வரும் நீர் வரத்தானது 73 ஆயிரத்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் நேற்று 57 ஆயிரத்து 398 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 91,169 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள இரு அணைகளில் இருந்து கடந்த 2 தினங்களாக ஒரு லட்சம் கனஅடிக்குள் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்ட ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80ஆயிரம் கன அடியாக குறைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் சரிந்து நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து சற்று குறைந்து வந்தபோதிலும், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18 நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர் காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News