உண்மையிலேயே அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை ஈர்த்து வந்தால் மகிழ்ச்சி- ஓ.பன்னீர்செல்வம்
- தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது.
- போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளில் தாராளமாக கிடைக்கிறது.
போடி:
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். எந்த அளவிற்கு அவர் நிதியை கொண்டு வந்து சேர்க்கிறார், எந்த அளவிற்கு அது மக்களுக்கு பயன் அளிக்கும் என்பது உண்மையிலேயே அந்த தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் தெரியவரும். எனவே முதலீடுகளை தமிழகத்திற்காக ஈர்த்து வந்தால் மகிழ்ச்சிதான்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இவைதான் தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதியை வழங்குவதில்லை என தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் தாங்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மின்கட்ட உயர்வு பல மடங்கு உயர்ந்துவிட்டது. போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளில் தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர் சமுதாயம் அழிவைநோக்கி செல்லும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.