தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்தால்... அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-07-06 07:26 GMT   |   Update On 2024-07-06 07:26 GMT
  • அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது.
  • அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும்.

மதுரை:

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை.

டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா? இல்லையா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார் அண்ணாமலை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும். இது சத்தியம்.

அண்ணாமலை அல்ல, எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். நாவடக்கம் இல்லாத அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்தும் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News