தமிழ்நாடு

மதுபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வழக்குகள்: சென்னையில் 2 மாதங்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்

Published On 2023-05-03 03:29 GMT   |   Update On 2023-05-03 03:29 GMT
  • மது போதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக வழக்குகளில் கடந்த 2 மாதங்களில் ரூ.11 கோடி அபராத தொகையை போலீசார் வசூலித்துள்ளனர்.
  • அழைப்பு மையங்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்து 832 மது போதை வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை:

மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அபராத தொகையை பலர் செலுத்துவது கிடையாது. எனவே 8 ஆயிரத்து 206 மது போதை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இது போன்ற அபராத வழக்குகளில் தீர்வு காண்பதற்காக சென்னை போலீஸ்துறை சார்பில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகின்றன. போக்குவரத்து விதிமீறலில் சிக்கிய வாகன ஓட்டிகள், மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையால் 698 மது போதை வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு ரூ.72 லட்சத்து 30 ஆயிரத்து 500 அபராத தொகையை போலீசார் வசூலித்தனர். இந்த அழைப்பு மையங்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்து 832 மது போதை வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.11 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை போலீஸ்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 361 பேரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News