தமிழ்நாடு

சனாதன விவகாரம்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக கெடு விதித்த அண்ணாமலை

Published On 2023-09-04 11:22 GMT   |   Update On 2023-09-04 11:22 GMT
  • தி.க. தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான் என்றார்.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய பேச்சு இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, "சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை."

"இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்."

"இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு பி.கே. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?"

"வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், பி.கே. சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News