தமிழ்நாடு (Tamil Nadu)

பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பலி- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

Published On 2023-03-15 06:07 GMT   |   Update On 2023-03-15 06:07 GMT
  • 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
  • பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.

பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News