தமிழ்நாடு (Tamil Nadu)

திருமங்கலம் பாடிக்குப்பத்தில் மந்திரவாதி வெட்டிக்கொலை

Published On 2023-07-14 06:49 GMT   |   Update On 2023-07-14 06:49 GMT
  • மந்திரவாதி சிக்கந்தர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
  • மந்திரவாதி கொலை சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சிக்கந்தர்.

38 வயதான இவர் வண்ணாரப்பேட்டையில் இருந்து குடிபெயர்ந்து பாடிகுப்பத்தில் தங்கி இருந்து மந்திரவாதியாக செயல்பட்டு வந்தார். பொதுமக்கள் பலர் தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்காக சிக்கந்தரை நாடி சென்று தாயத்து, கயிறு உள்ளிட்டவைகளை கட்டி வந்தனர். இந்த நிலையில் மந்திரவாதி சிக்கந்தர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் நேற்று பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் விரைந்து சென்று சிக்கந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாணையில் பரபரப்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்கந்தரின் நண்பர் ஒருவர் அடிக்கடி சிக்கந்தரை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு ஓரினச்சேர்க்கைக்கு சிக்கந்தரை நண்பர் அழைத்ததாகவும் தெரிகிறது.

இதற்கு சிக்கந்தர் மறுப்பு தெரிவித்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிக்கந்தரின் நண்பர் கஞ்சா போதைக்கு அடிமையானதும் அதன் பிறகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததும் தெரிய வந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி புருஷோத்தமனுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பிறகே நண்பர் இப்படி ஆகிவிட்டதாக சிக்கந்தர் கருதினார்.

குறிப்பிட்ட ரவுடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை மந்திரவாதி சிக்கந்தர் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரவுடியும், நண்பரும் சேர்ந்து சிக்கந்தரை கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள ரவுடியையும் அவரது கூட்டாளியான மந்திரவாதியின் நண்பரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மந்திரவாதி கொலை சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News