தமிழ்நாடு (Tamil Nadu)

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு திங்கட்கிழமை வரை அனுமதி

Published On 2024-06-13 12:39 GMT   |   Update On 2024-06-13 12:40 GMT
  • வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன.
  • இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் நாளைமுதல் இயக்க தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 547 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, முன்பதிவு செய்த பயணிகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. சனி, ஞாயறு உள்பட அடுத்த நான்கு நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள சுமார் 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை ஆணையர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இது தொடர்பாக பேச்சவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திங்கட்கிழமை வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக,

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகள், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போன்றே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தினார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News