தமிழ்நாடு

விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு: அதிமுக-வுக்கு திருமாவளவன் அழைப்பு

Published On 2024-09-10 07:14 GMT   |   Update On 2024-09-10 07:19 GMT
  • சாராய விற்பனையில் அரசு ஒரு தாராளமான நிலைப்பாட்டை எடுக்கிறது.
  • இதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். 2006-ல் இருந்து 2024 வரை 1589 பேர் பலியாகியுள்ளனர்.

2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. திமுக-வுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அதிமுக-வுக்கும் உடன்பாடு உண்டு. இடது சாரி கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உடன்பாடு உண்டு.

எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன்? என்பதுதான் எல்லோருடைய கேள்வி.

நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. சாராயம் என்றாலே அது கேடுதான். நல்லச்சாராயம் என்று ஏதும் இல்லை.

உள்ளத்திற்கும், உடலுக்கும் தீங்கானது. சமூகத்திற்கும், தேசத்திற்கும் கேடானது. ஆகவே முழுமையான மதுவிலக்குதான் தீர்வாக இருக்க முடியும்.

அரசாங்கமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த முடியும் என்பதை கற்பனையான வாதம். எல்லா மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கிறது. ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசுகள் மதுபான கடைகளை திறந்திருக்கிறது.

பீகார், குஜராத் மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கதான் செய்கிறது. அதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் மதுபானங்கள் இருப்பதால். அதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சாராய விற்பனையில் அரசு ஒரு தாராளமான நிலைப்பாட்டை எடுக்கும்போது, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் தயக்கம் ஏன்? என்பது யாரை குறித்து கேட்கிறீர்கள் என்ற கேள்விக்கு மதுவிலக்கை வலியுறுத்தும் எல்லோருக்கும்தான். அதிமுகவும் சொல்கிறது. ஆனால் அமல்படுத்தவில்லை. அவர்களும் எங்களுடன் சேரட்டும். இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும். அதிமுக கூட வரலாம். எந்த கட்சிகளும் வரலாம் என்றார். மது ஒழிப்பை வலியுறுத்தும் அனைவரும் ஒரே மேடையில் நிற்கும் தேவை உள்ளது.

Tags:    

Similar News