த.வெ.க. மாநாடு: உயிரிழந்த தொண்டர்கள், துயரில் இருந்து வெளிவர முடியாமல் மனம் தவிக்கிறது - விஜய் இரங்கல்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
த.வெ.க. மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 6 த.வெ.க. உறுப்பினர்கள் மரணமடைந்தனர்.
இந்நிலையில், சாலை விபத்துக்களில் உயிரிழந்த த.வெ.க. உறுப்பினர்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் பதிவில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார், கழகத் தோழர், செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ், கழகத் தோழர், வில்லிவாக்கம், சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.