செய்திகள் (Tamil News)

தென் சீனக்கடல் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Published On 2017-01-24 18:49 GMT   |   Update On 2017-01-24 18:49 GMT
தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பீஜிங்:

தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்காவை ''தென் சீனக் கடலில் தங்களுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டாம்'' என சீனா எச்சரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

இதனையடுத்து, தென் சீனக் கடல் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தினால் போருக்குத் தயாராக இருக்குமாறு அமெரிக்காவுக்கு 
சீனா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தென் சீனக் கடல் சர்வதேச செயல்பாடுகளுக்கு உரிய பகுதி என்றும், அதற்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அமெரிக்கா மீண்டும் எச்சரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் பேசும்போது, "தென் சீனக் கடல் என்னைப் பொறுத்தவரை சர்வதேச செயல்பாடுகளுக்கு உரியது என்றே நான் நினைக்கிறேன். அதனை சீனா சொந்தம் கொண்டாட முடியாது. 

தொடர்ந்து அமெரிக்க தென் சீனக்கடல் பாதுகாப்பை உறுதி செய்யும்" என்று கூறினார்.

இந்நிலையில், தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவுக்கு 
சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ”தென் சீனக்கடலில் சீனா தனது இறையான்மையை நிலைநாட்டியே தீரும். தங்களது உரிமைகளையும், நலன்களையும் உறுதி செய்யும்” என்றார்.

Similar News