செய்திகள் (Tamil News)

மேலும் ரூ.13 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு வரி- அமெரிக்கா நடவடிக்கை

Published On 2018-07-12 06:48 GMT   |   Update On 2018-07-12 06:48 GMT
அமெரிக்காவில் விற்பனையாகும் ரூ.13 லட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

சீனாவில் உற்பத்தியாகும் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் அமெரிக்க பொருட்களும் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில் அமெரிக்க பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சீனா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தது.

சுமார் ரூ.2 லட்சம் கோடி பொருட்களுக்கு இவ்வாறு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் ரூ.2 லட்சம் கோடி பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் அமெரிக்காவில் விற்பனையாகும் ரூ.13 லட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசர் வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக ராபர்ட் லைத்தீசர் மேலும் கூறியதாவது:-


அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவை அடுத்து சீனாவில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வரும். இதன் மூலம் அமெரிக்க பொருட்கள் விற்பனையை சந்தையில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக சீன வர்த்தக மந்திரி லீ செங்காங் கூறும் போது, சீனா- அமெரிக்கா இரு நாடுகளுமே பொருளாதார வல்லரசுகளாக உள்ளன.

அமெரிக்கா பழிக்குப் பழியாக வரி விதிப்பை மேற்கொண்டால் இரு நாடுகளுமே வர்த்தக பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இது மட்டும் அல்லாமல், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச பொருளாதார கொள்கைக்கு எதிரானது. மேலும் சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார். #DonaldTrump #US
Tags:    

Similar News