மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா - லண்டன் சென்றடைந்தார் துணை ஜனாதிபதி
- மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நாளை நடைபெறுகிறது.
- இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
லண்டன்:
இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.
இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் நாளை அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற உள்ளது. இதில் அவரது மனைவி கமீலாவும் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே, முடிசூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இங்கிலாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.