செய்திகள் (Tamil News)

திருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

Published On 2018-01-02 09:31 GMT   |   Update On 2018-01-02 09:31 GMT
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு 33 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு ரத்தின சபாபதிப் பெருமான் (நடராஜபெருமான்) கோவில் வளாகம் பின் புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா தொடங்கியது.

பின்னர், நடராஜருக்கு, கதம்பத் தூள், நெல்லிப்பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை வரை நடத்தப்பட்டது.

பின்னர் நடராஜபெருமானுக்கு சர்வ அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News