செய்திகள் (Tamil News)
சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-01 05:34 GMT   |   Update On 2021-10-01 05:34 GMT
வழிபாட்டு தலங்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு அறிவித்து உள்ளது.
கபிஸ்தலம் :

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவித்து உள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து வைக்க வேண்டும். பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதய நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் தரிசனம் செய்ய ஏதுவாக ‘லிப்ட்’ வசதி செய்துதர வேண்டும். சுவாமிமலை முருகன் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள தங்க கோபுர கலசம் சற்று சாய்வாக உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். அனைவரையும் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேதமுரளி, வாசன் வெங்கட்ராமன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் சத்யநாராயணன் நன்றி கூறினார்.

Similar News