பெட்ரோல் குண்டு வீசிய கஞ்சா குற்றவாளிகள் 2 பேர் கைது
- சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் பழக் கடை யில் வேலை செய்யும் ஒருவருக்கும் மணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடங்காத மணி, வெங்க டேசன் ஆகியோர் சாலையில் கிடந்த 2 காலி மதுபாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் கலந்து திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் எரிந்தனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு செல்வாநகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (வயது23). பழக்கடை வைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த வர் மணி என்ற கியா மணி (வயது 21), இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் பழக் கடை யில் வேலை செய்யும் ஒருவருக்கும் மணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த சஞ்சய்குமார், மணியை அழைத்து, என் கடையில் வேலை செய்பவனிடம் நீ எப்படி தகராறு செய்யலாம் என கேட்டு கையால் தலையில் தாக்கினார். இது மணிக்கு பெருத்த அவமானமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கஞ்சா வழக்கில் கைதாகி மணி சிறைக்கு சென்று வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது நண்பரான அரியாங்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற வெங்காயம் ( 21) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து வெங்காய வெங்கடேசனிடம் கூறியுள்ளார். உடனே வெங்கடேசன், மணியை அழைத்து சென்று சஞ்சய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 10.45 மணியளவில் வியாபாரம் முடித்துவிட்டு சஞ்சய்குமார் வீட்டிற்கு வந்தார்.
சிறிது நேரத்தில் ஆத்திரம் அடங்காத மணி, வெங்க டேசன் ஆகியோர் சாலையில் கிடந்த 2 காலி மதுபாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் கலந்து திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் எரிந்தனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக, திரி வெளியில் விழுந்த தால், பெட்ரோல் நிரம்பிய மதுபாட்டில்கள் மட்டும் வீட்டு சுவற்றில் விழுந்தது.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சத்தம் கேட்டு வெளியில் வந்த சஞ்சய்குமார் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.