புதுச்சேரி

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் வல்லவன் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம்

Published On 2023-11-15 06:28 GMT   |   Update On 2023-11-15 06:28 GMT
  • பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு
  • ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரிய இழப்பீடு வழங்க கோரினர்.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 14 பேர் படுகாய மடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் என்ற ஊழியர் இறந்தார். அவரின் உடல் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.

இறந்த ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரிய இழப்பீடு வழங்க கோரினர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதன்படி கலெக்டர் வல்லவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இறந்த நெடுஞ்செழியன் குடும்பத்தினர், தொழிற்சாலை பிரதிநிதிகள், ஏ.ஐ.சி.சி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலத்தலைவர் மோதிலால், நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ், தொழிற்சங்க செயலாளர் ரமேஸ், நிர்வாகிகள் வினோத், மணிபாரதி, வெங்கடேஷ், முகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.

மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்கவும் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. நெடுஞ்செழியன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News