கொட்டும் மழையில் விசைப்படகு உரிமையாளர்கள் மறியல்
- போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு
- பிரச்சினைகளுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பர். இந்த மீன்களை துறைமுகத்தில் இறங்கு தளத்தில் வைத்து விற்பனை செய்வர். வைத்திக்குப்பம், குருசு குப்பம், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவ பெண்கள் வாங்கி விற்பனைக்கு கொண்டுசெல்வர்.
நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் நடந்த தகராறு எதிரொலியாக இன்று யாரும் மீன் வாங்க வரவில்லை.
இதனால் ஆவேசமடைந்த விசைப்படகு உரிமை யாளர்கள் மரப்பாலம் சந்திப்பில் கொட்டும் மழையில் திடீரென காலை 11.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் மலையாளத்தான் தலைமை வகித்தார். பிரச்சினைகளுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை இழுத்துச்சென்று கைது செய்தனர். 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
பைபர் படகு உரிமை யாளர்கள் சங்கத்தினர் தங்களுக்கு டீசல் மானியம் வழங்கவில்லை என புகார் கூறி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்தமாதம் முதல் டீசல் மானியம் வழங்கப்படும் என்றும், துறைமுகத்திலேயே டீசல் விற்பனை நிலையம் செயல்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.