ஜிப்மரில் சிகிச்சை பெறுவோர் குடும்பத்தினரிடம் கலெக்டர் விசாரணை
- வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.
- பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் அமரன் (24). இவர் கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துள்ளார்.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சங்கர்(50), தரணிவேல்(50), மண்ணாங்கட்டி(47), சந்திரன்(65), சுரேஷ்(65), மண்ணாங்கட்டி(55), ஊத்துக்காட்டான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.
உடனடியாக உறவினர்கள் ஜிப்மர் மருத்துவ மனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் சுரேஷ், சங்கர், தரணி வேந்தன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்து பார்த்தார்.
அப்போது ஜிப்மர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மண்ணாங்கட்டி ராஜீ (60), மண்ணாங்கட்டி (41) ஆகியோர் உடல்நிலை குறித்து கலெக்டர் பழனி கேட்டார். அவர்கள் இருவரும் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் குடும்பத்தாரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.