எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு அளிக்கும் வரை தொடர் போராட்டம்-பா.ம.க.அறிவிப்பு
- புதுவை அரசு பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
- உடனடியாக அமைச்சரவையை கூட்டி 2012-ம் அரசாணையை ரத்து செய்து விட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர்பணியில் எம்.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரசு பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பணிகளுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசு பணியிடங்களில் எம்.பி.சி., இட ஒதுக்கீடு குறித்த பா.ம.க., சார்பில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-
போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பில் எம்.பி.சி.,க்கான இட ஒதுக்கீடு வழங்காதது கண்டனத்திற்குரியது கடந்த 2010-ல் இதே பணி நியமனத்தில் எம்.பி.சி., இட ஒதுக்கீடு பின்பற்றிய நிலையில், தற்போது, 2012-ம் ஆண்டு அரசாணையை காரணம் காட்டி, பி-கிரேடு இட ஒதுக்கீடு இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக அமைச்சரவையை கூட்டி 2012-ம் அரசாணையை ரத்து செய்து விட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர்பணியில் எம்.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.