பாசிக் நிறுவனத்தை மூட முடிவு - ஏ.ஐ.டி.யூ.சி. கண்டனம்
- சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.
- பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி, மூடிக்கிடக்கும் அரசு நிறுவனங்கள் திறக்கப்படும். நலிவடைந் துள்ள பொதுத் துறை நிறுவனங்களை சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சுதேசி , பாரதி, ஏ.எப்.டி. பஞ்சாலைகள், கூட்டுறவுசர்க்கரை ஆலையை மூடியுள்ளனர். இதை தொடர்ந்து இப்போது பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி அரசு தொழிலாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இதை ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும். ஜனநாயக வழியில் ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.