மீனவர்கள் இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும்
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை
- புதுவையில் மீனவ மக்கள் 3-வது மிகப்பெரிய சமுதாயமாக இருக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக மீனவர் தினம் நவம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும் மீனவர்களின் பங்களிப்பினை போற்றி பாராட்டி வருகின்றன. புதுவையில் மீனவ மக்கள் 3-வது மிகப்பெரிய சமுதாயமாக இருக்கின்றனர்.
இங்கு வசிக்கும் மீனவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.330 கோடிமதிப்புள்ள மீனை உற்பத்தி செய்து, மாநில வருவாய்க்கு அளிக்கின்றனர். இருப்பினும் அவர்களை எதிர்நோக்கி உள்ள சவால்களை அரசு சரியாக கையாளவில்லை. மீனவர்கள் தொழிலுக்கு அவசியமான கட்டுமானத்தை அரசு உருவாக்கவில்லை.
புதுவை அரசு ரூ.70 கோடியை மட்டும் அந்த சமூகத்துக்கு செலவிடுகிறது. பெரும்பாலான மீனவ மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். சமூக ரீதியாக அவர்களது பிள்ளைகள் தரமான கல்வியையும் வேலை வாய்ப்பினையும் பெற முடியவில்லை. புதுவை மீனவர்கள் கோரும் ஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்தினால்தான் அவர்களுக்கு உண்மையான சமூக நீதி கிடைக்கும். புதுவை அரசு மீனவ மக்களுக்காக சிறப்புக் கூறு திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்வதே மீனவர்களுக்கு இந்த அரசு செய்யும் பெரிய சேவையாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.