- ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி
- கென்னடி நகரை சேர்ந்தவர் புகழேந்தி
புதுச்சேரி:
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுவை உருளையன் பேட்டை கென்னடி நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சரோஜா(58) மற்றும் அவரது மகள் திவ்யா(33) ஆகியோரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார்.
ஏலச்சீட்டு முடிந்தும் புகழேந்திக்கு அதற்கான பணத்தை சரோஜாவும் அவரது மகள் திவ்யாவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோல் மேலும் 8 பேருக்கு அவர்கள் ஏலச்சீட்டு பணத்தை தரவில்லை என தெரிகிறது. மொத்தம் ரூ.25 லட்சத்து 18 ஆயிரம் வரை அவர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.
ஏலச்சீட்டு பணத்தை புகழேந்தி கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று புகழேந்தி சரோஜா வீட்டுக்கு சென்று ஏலச்சீட்டு பணத்தை கேட்ட போது சரோஜா அவரது மகள் திவ்யா மற்றும் திவ்யாவின் கணவர் பிரபாகரன் ஆகியோர் புகழேந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த புகழேந்தி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.