நாராயணசாமி ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை கூறுகிறார்
- அன்பழகன் பேச்சு
- புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை ஏம்பலம் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
தொகுதி செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜாராமன், பெரியசாமி, ராமசாமி, சேகர், ரேணுகாதேவி, சண்முகம், அழகப்பன், தெய்வநாயகம், ராஜேந்திரன், செல்வராணி, நல்லதம்பி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏம்பலம் தொகுதியை குறிவைத்து பசுமை வாய்ந்த விவசாய நிலைங்களை பிளாட் போட்டு விற்று வருகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். 2 ஆண்டு புதுவையின் பட்ஜெட்டே ரூ.25 ஆயிரம் கோடிதான். ஆனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு களை கூறும் போது ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். நாராயணசாமிக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் பதிலளிப்பதில்லை. பதில் அளிக்காததால் குற்றச்சாட்டு உண்மை என அவர் பேசி வருகிறார்.
தமிழகம் போல புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார். தமிழகம் இன்று அழிவுப்பாதையில் செல்கிறது.
எனவே எடப்பாடியார் கரத்தை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் வலுப்படுத்த தயாராகிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்
அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். புதுவை தொகுதி வெற்றிக்கு ஏம்பலம் தொகுதி செயல்வீரர்கள் வீராங்கணைகள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.