தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
- புதுவையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. புதிய ஆடைகள், பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.
இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் சண்டே மார்க்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் வியாபாரம் பாதித்தது. சண்டே மார்க்கெட் கடைகளை மூடினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் நகர பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நகர பகுதியில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்திருந்தனர். புதுவையில் இன்று காலை பரவலாக அவ்வப்போது பெய்தது.
மழையை பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள கூட்டம் அலை மோதியது.