புதுச்சேரி

கிருமாம்பாக்கம் பகுதியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் அணிவகுப்பு நடத்திய காட்சி.


மக்கள் பீதியை தவிர்க்க கிராமங்களில் போலீஸ் அணிவகுப்பு

Published On 2023-11-08 08:21 GMT   |   Update On 2023-11-08 08:21 GMT
  • 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  • கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும்,

புதுச்சேரி:

பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும், சாமிக்கு வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது சம்பந்தமாக இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

கோவிலில் திருட்டு சம்பவம் நடந்ததால் பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கந்தன் பேட் பகுதிகளில் நேற்று இரவு போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, பண்டிகை காலம் என்பதால் வெளியில் செல்லும்போது வீடு பூட்டி இருக்கிறதா என்று உறுதி செய்த பின்பு செல்ல வேண்டும். மேலும் வீட்டிலேயே சாவியை வைத்து விட்டு செல்லக்கூடாது.

ஊருக்குள் சந்தேகப்ப டும்படியான நபர்கள் சுற்றி வந்தால் போலீசாருக்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம். வீட்டில் உள்ள வாகனங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பூட்டுகளால் பாதுகாக்க வேண்டும். சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.

பண்டிகை காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பட்டாசை வெடிக்க வேண்டும். என அறிவுறுத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசும்போது: ரோந்து போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அவ்வப்போது ஊருக்குள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News