- கூடைப்பந்து போட்டியை புதுவை உப்பளத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
- இறுதி போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின.
புதுச்சேரி:
இந்திய கூடைப்பந்து கழகமும், புதுவை கூடைப்பந்து கழகமும் இணைந்து, தென்னந்திய தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியை புதுவை உப்பளத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த போட்டியில் 83-67 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 5 லீக் போட்டியிலும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 2-வது இடத்தை கேரளாவும், 3-வது இடத்தை தெலுங்கானா அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் கேரளா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை தமிழ்நாடும், 3-வது இடத்தை கர்நாடகாவும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கி பாராட்டினார். இப்போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த அணிகள், வருகிற நவம்பர் மாதம் உதயப்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.